Saturday, December 21, 2013

“சூஃபிய சித்தாந்தமும் சித்தர்களும் சித்தர்களும்“



பேராசிரியர் முனைவர் ச. மகாதேவன், எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்.டி
தமிழ்த்துறைத் தலைவர்,
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி (தன்னாட்சி),
ரஹ்மத் நகர், திருநெல்வேலி 627 011.

ஆய்வு முன்னுரை
      இஸ்லாம் என்ற சொல்லின் பொருள் அடிபணிதல் என்பதாகும்.  எல்லாம் வல்லான் ஏக இறைவன் அல்லாவுக்கு அடிபணியும் அற்புத மார்க்கமே இஸ்லாமிய மார்க்கம்.  அறிவுக்கும் உணர்வுக்குமான போராட்டத் தேடலில்தான் மெய்ஞாஞானிகள் உதயமாகிறார்கள்.  அறிவினால் அறியபடக்கூடியவன் இறைவனா? உணர்வால் உணரப்படக் கூடியவன் இறைவனா? என்ற வினாதான் ஞானிகளின் போக்கினைத் தீர்மானிக்கிறது. வேதங்களும், மந்திரங்களும், பூசைகளும் சடங்குகளாக மாறும்போது ஒவ்வொரு சமயத்திலும் ஆத்மத் தேடலில் இறைவனைத் தேடக் கூடியவர்கள் புறப்படுகிறார்கள்.  அவர்களே அஷ்டமா சித்திகளைப் பெற்ற சித்தர்கள்.  அவர்களுடன் சூஃபியச் சித்தாந்தத்தை ஒப்புநோக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
சித்தர்கள் ஓர் அறிமுகம்.
      இறையருளினாலே இறைவனைக்காணும் அறிவினைப் பெறுவதே சித்து, இவ்வறிவின் மூலம் இறைவனைப் பெற்றவர்கள் சித்தர்கள், தம் உயிர் ஆற்றலான குண்டலினி சக்தியை மூலாதாரம், உந்தி, நாபி, இருதயம், தொண்டை, புருவ மத்தி ஆகிய ஆதாரங்களில் தேக்கும் போது இச்சித்தர்கள் எட்டு வகைச் சித்திகளைப் பெறுகிறார்கள்.
1. அணிமா : தோற்றத்தில் பெரிய பொருளை மிகச் சிறியதாக ஆக்குவது. 2. மகிமா : தோற்றத்தில் மிகச் சிறிய பொருளை மிகப் பெரிய பொருளாக ஆக்குவது 3. லகிமா : சுமையுள்ள பொருளை மிகவும் லேசானதாக ஆக்குவது. 4. கரிமா: லேசான பொருளை மிகவும் சுமையுடைய பொருளாக ஆக்குவது. 5. பிராத்தி : எவ்வுலகத்தும் எவ்விடத்தும் தடையின்றிச் சஞ்சரித்தல் 6. பிரகாமியம் : பிறர் உடலில் நுழைதல் 7. ஈசத்துவம் : ஐந்து தொழிலையும் நடத்துதல் 8. வசித்துவம் : எழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தன் வசப்படுத்துதல்.
இச்சித்தர்களைப் பதினெட்டு சித்தர்கள் என்பர்.
1. அகத்தியர், 2. அகப்பேய், 3. அழுகணி 4. இடைக்காடர், 5. இராம தேவர், 6. இராமலிங்கர், 7. உரோமரிஷி 8. கபிலர் 9. கருவூரார் 10. காகபுசுண்டர், 11. குதம்பைச் சித்தர், 12. கொங்கணர்   13. கோரக்கர், 14. சட்டைமுனி, 15. சிவவாக்கியர், 16. தன்வந்திரி, 17. பாம்பாட்டிச் சித்தர், 18. திருமூலர்.
      இவர்கள் யோகம் மேற்கொண்டு ஊனினைச் சுருக்கி உள்ளொளி பெருக்கியவர்கள்.  அவன் அருளாலே அவனைத் தொழுது வணங்கியவர்கள்.  உருவ வழிபாட்டினை எதிர்த்தவர்கள்.  இறைவனைச் சத்சித்து ஆனந்தனாகக் கண்டவர்கள் (சத் என்றும் உள்ளது, சித் பேரறிவு, ஆனந்தம் அழிவிலாப் பேரின்பம்) இயற்கையோடு இயைந்து வாழ் வாங்குவாழ்ந்தவர்கள்.
சூஃபியச் சித்தாந்தம்
      மெய்ஞ்ஞானம் (மஃரிபா) என்பது உள்ளமையே அறிவது.  யாவற்றையும் அறிந்தவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. தக்வா எனும் பயபக்தியும், ஆத்மஞானயோகமும், நம்மனத்தைச் சுத்தப்படுத்தும்.  ஐரோப்பிய எழுத்தாளர்கள், சூஃபியா எனும் சொல்லைச் சோபோஸ் எனும் கிரேக்கவேர்ச்சொல்லோடு தொடர்புபடுத்தி அறிவாளி என்ற விளக்கம் தந்துள்ளனர்.  மென்மையான ஆடைகள் அணிந்த செல்வந்தரிடமிருந்து வேறுபட்டு, சூஃப் எனும் கரடுமுரடான ஆடை அணிந்த எளிமையான ஞானிகளைச் சூஃபிக்கள் என அழைத்தனர்.  எனினும் தூய்மை என்ற பொருள் ‘வரும் ‘ஸஃபா‘ எனும் சொல்லிலிருந்தே ‘சூஃபி‘ எனும் சொல் வந்ததாக அறிய முடிகிறது.
1.   தெய்வக்காதலும், தெய்வபக்தியுமே சூஃபியத் தத்துவத்தின் அடிப்படைக் கருத்தாக அமைகிறது.
2.   அறிவும் அன்பும், உலகியல் ஆசை துறத்தலுமே சூஃபிய மார்க்கத்தின் வழிமுறைகளாய் அமைகின்றன.
3.   எல்லாச் சமயங்களும் தொடங்குமிடமும், முடியக் கூடிய இடமும் ஒன்றுதான் என நம்புவது.  அதாவது எல்லாவற்றுக்கும் காரணம் ஏக இறைவனின் அருட்கொடையே எனக் கருதுவது.
4.   புறக்கண்ணை மூடிவிட்டு, அகக்கண்ணால் யாவற்றையும் பார்க்கப் பழகுவது.
5.   மாசடைந்த ஆத்மாவை, இறைப்பற்றால் புதிதாக்குவது.
6.   ஒழுக்கம் நிறைந்த வாழ்வு, தூய்மையான வாழ்வு, இறைவனைப் பற்றிச் செல்லும் வாழ்வு, இவை சூஃபியர்களின் நோக்கமாய் அமைந்தன.
7.   குரு சீடர் அமைப்பு முறை இச்சித்தாந்தத்தில் நிலையானது.  எல்லாம் வல்ல இறைவன் கற்பிப்பவனாக, நாம் கற்பவர்களாக உள்ளோம் எனக் கருதுவது.
      உலக அளவில் ஹல்லாஜ் ஈப்னுல் அரபி, ஜலாலுத்தீன் ரூமி, சஅதி, ஹாபிஸ், ஜாமி போன்ற சூஃபியாக்கள் புகழ் மிக்கவர்களாய் திகழ்ந்தனர்.
      தமிழ்நாட்டில் சித்தர்களையும், சூஃபியா ஞானிகளையும் பிரித்துப் பார்க்க இயலா அளவிற்குப் பாடுபொருள், பாவகை வடிவம், உணர்ச்சி போன்றவற்றில் ஒற்றுமை தெரிகிறது.  “பதினெட்டு சித்தர்களின் ஞானக்கோவையில் பீர் முகம்மதப்பா என்ற (முஸ்லீம்) சூஃபி மகானின் ஞானரத்தினக் குறவஞ்சியும் இடம் பெற்றுள்ளதுஎனத் தக்கலை பஷீர் (ஞான இலக்கியங்கள்) குறிப்பிடுவது ஒற்றுமைக்குச் சான்று பகருகிறது.
ஆனந்தக் களிப்பு
      இறைவனோடு இரண்டறக் கலக்கும்போது ஏற்படும் பேரானந்தக் களிப்பினைத் தாயுமானவர், கடுவெளிச் சித்தர் போன்றோரை அடியொற்றி இஸ்லாமியச் சூஃபி புலவர்களும் பாடியுள்ளனர்.  கீழக்கரை அல் ஆரிஃபா, செய்யிது ஆசியா உம்மா, தக்கலை பீர் முகம்மது சாகிப் (ஒலி), குணங்குடி மஸ்தான் சாகிபு, கோட்டாறு சேகு தம்பி ஞானியார், முத்துப்பேட்டை பீர் முகம்மது மஸ்தான், அய்யம் பேட்டை அப்துல் கனி, மேலப்பாளையம் மெய்ஞ்ஞானி முஹைய்யத்தீன் ஷெய்கு பஷீர் (ஒலி), கல்லிடைக் குறிச்சி கலிபத்து செய்கு சாகுல் அமீது, புதூர் முகம்மது மஸ்தான், தொண்டி மோனகுரு செய்கு மஸ்தான் சாகிபு, செய்கு முகம்மது மௌலானா போன்ற சூஃபியக் கவிஞர்களைச் சித்தர்களோடு பலகோணங்களில் ஒப்பு நோக்க முடிகிறது.  (எம்.எஸ். பஷீர், சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வெள்ளிவிழா மலர்).
சூஃபியச் சித்தாந்தமும் சித்தர்களும்
      எண்ணிய எண்ணியாங் கெய்துவர் எண்ணிய
       திண்ணிய ராகப் பெறின் (குறள் 666)
1.   எண்ணத்தை அடக்கி, எண்ணியதைச் சித்தர்கள் அடைந்தார்கள்.  “தனித்திரு. விழித்திரு பசித்திரு“ எனச் சித்தர்கள் வாழ்ந்தார்கள்.  சூழ்ந்த தத்துவங்கள் எல்லாவற்றையும் விட்டு விலகி ஆன்மாவைத் தனியே கொண்டு செல்லுதலே “தனித்திருத்தல்“ என்பதாகும்.  யோக மார்க்கத்தில் புருவங்களின் மத்தியில் அமையும் ஆற்றலை எழுப்பி விழித்திருக்கச் செய்தலையே சித்தர்கள் “விழித்திருத்தல்“ என்றனர்.  அருள்வயப்பட்ட ஆன்மாவை எழுப்பி அதிலிருந்து கிடைக்கும் அமுதத்தைச் சித்தர்கள் உண்டார்கள்.  எனவே அதை உண்ணப் “பசித்திருத்தல்“ என்றார்கள்.
2.   சமயம், சடங்கு கடந்தவர்களாகச் சித்தர்கள் திகழ்ந்தார்கள்.
3.   “காது அறுந்த ஊசி கூடக் கடைசிப் பயணத்தின்போது வராது“ என்ற நிலையாமையை வலியுறுத்தி, இறைநெறி நோக்கித் திருப்ப முயன்றிருக்கிறார்கள்.
4.   அவர்களது பாடல்கள் மக்களின் சாதாரண பேச்சு வழக்கு நடையிலே அமைந்தன.
5.   பாடல்கள் குறியீட்டுத் தன்மையோடு அமைந்தன.  மேலோட்டமாகப் படித்தால் சாதாரணப் பொருளும், ஆழ்ந்து நோக்கினால் ஆழமான பொருளும் பொதிந்ததாகவும் அமைந்தன.
6.   “நட்ட கல்லைத் தெய்வமென்று நாலு புட்பம் சாத்தியே சுற்றி வந்து முணமுண என்று சொல்லுமந்திரம் ஏதடா நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்என்று சிவவாக்கியர் பாடியதைப் போன்று உருவ வழிபாட்டினை எதிர்த்தார்கள்.
7.   “சாத்திரத்தைச் சுட்டெரித்தால் அவனே சித்தன்“ என்ற அகத்தியரின் பாடல் வரி சித்தர்களின் போக்கை விவரிக்கும்.
சூஃபிப் புலவர்களின் நெறி
      சித்தர்களைப் போன்றே குணங்குடியார், பீரப்பா போன்றோர் எழுதினாலும், இஸ்லாத்தின் நெறிக்குட்பட்டே எழுதினார்கள்.  அரேபிய நாட்டில் நடந்த நபிகள் பெருமானாரின் (ஸல்) வாழ்வைத் தமிழில் தந்த போது உமறுப்புலவர் எப்படித் தமிழ்ச் சூழலுக்கு ஏற்பத் தந்தாரோ அதே போல், சூஃபிப் புலவர்கள் இஸ்லாத்தின் வேரை அடித்தளமாகக் கொண்டே கிளை பரப்பினார்கள்.
      தம் குருநாதர் தாயுமானவர் பராபரக் கண்ணியைப் (389 கண்ணிகள்) பாடியதை மனதிற் கொண்டு குணங்குடியார் நிராமயக் கண்ணி (281 கண்ணிகள்), ரகுமான் கண்ணி (100) பராபரக் கண்ணி (100) புலம்பற் கண்ணி (17) கண்மணி மாலைக் கண்ணி (100) மனோன்மணிக் கண்ணி (100), நந்தீஸ்வரக் கண்ணி (51) ஆகியவற்றை இயற்றினார்.
      குணங்குடியாரைக் குருநாதராகக் கொண்டு ஐயா சாமி முதலியாரும், மகாவித்வான் திருத்தணிகைச் சரவணப் பெருமாள் ஐயரும், வெங்கட் ராய பிள்ளை கவிராயரும், கோவளம் சபாபதி முதலியாரும் பல பாடல்களைப் பாடினர்.  ஆக சூஃபிப் புலவர்கள் சமய நல்லிணக்கம் உடையவர்களாய் திகழ்ந்தனர்.
      1980 ஆம் ஆண்டு குணங்குடியாரின் பாடல்களைத் தொகுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் குணங்குடியார் சூஃபி மரபுப்படி திரிசிரபுரம் மௌலவி ஷாம் சாஹிபிடம் “முரீது“ எனும் தீட்சை பெற்றிருக்கிறார்.  “கல்வத்“ எனப்படும் யோக நிட்டையில் ஆழ்ந்திருக்கிறார்.  வலிமார்களின் கோமான் முகியத்தீன் ஆண்டவர் அப்துல் காதர் ஜீலானி அவர்களை ஞான குருவாகக் கொண்டு “காதிரிய்யா“ நெறிப்படி ஒழுகி வந்துள்ளார்“ எனக் குறிப்பிடுகிறார்.
அழுகணிச் சித்தரும் சூஃபியப் புலவர்களும்
      உடலை இகழ்தல் என்பதும், ஆத்மாவுக்கு மரியாதை தருவதும் சித்தர் நெறி.  அழுகணிச்சித்தரின் தாக்கம், சூஃபியப் புலவர்களிடம் இருப்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

“உற்றைச் சடலமடி உப்பிருந்த பண்டமடி
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை
மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால்
ஊற்றைச் சடலம் விட்டே என் கண்ணம்மா
உன் பாதம் சேரேனோ“          (அழுகணிச் சித்தர் பாடல்)
     
      இதே பொருளில் பீரப்பா “ஊத்தைச் சடலம் படைத்து உலையாமலே உப்புக் கடலைப் புகட்டி“ (பீரப்பா ஆனந்தக்களிப்பு 8) என்கிறார்.  மெய்ஞ்ஞானி பஸீர் (ஒலி) ஊற்றைக் குணங் கொண்ட காயம் இதற்கொன்பது வாசலு மொழுங்காக உண்டும், நாற்றம் பொதிந்ததிக் காயம் இதை நம்பாதே மனமே” (12) எனக் குறிப்பிடுகிறார்
      மனித உடல் அழியக் கூடியது, ஊத்தைக்குழி என்று குணங்குடியார் நிராமயக் கண்ணியில் பாடுகிறார் இவ்வாறு...
      “ஊத்தைப் பிணமாம் உடலை இடிசுவரை
       ஏற்றபடி விடுதல் ஈனம் நிராமயமே“ நிராமயக் கண்ணி 23
      சமயத்தால் சித்தர்கள் வேறுபட்டாலும் சிந்தனையில் ஒன்றுபடுகிறார்கள்.
பாம்பாட்டிச் சித்தரும் முத்துப்பேட்டை பீர் முஹம்மது மஸ்தானும்
      மூலாதாரமான பாம்பினை யோகப் பயிற்சியினால் எழுப்பி மேல் ஏற்றும் திறம்பற்றிப் பாடியதால் பாம்பாட்டிச் சித்தர் எனப்பட்டார்.  இறைவனைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் ஒருக்காலும் கண்டதில்லை என்பதை
      கண்டவர்களொரு காலம் விண்டிடர்கள்
       விண்டவர்களொரு காலும் கண்டிடார்கள்
       கொண்டே கோலமுள்ளவர்கள் கோறிலை காணார் எனக்
       கூத்தாடிக் கூத்தாடி ஆடு பாம்பே“            (பாம்பாட்டிச் சித்தர்)
இதே பொருளில் முத்துப்பேட்டை பீர்முஹம்மது மஸ்தான்
     

“கண்டவர் சொன்னதில்லைக் கருவுருவான சோதி
       கண்டவர் விண்டதெல்லாம் கருத்துடன் ஒருமித்துக்காண
       கண்ட சூட்சமத்தை அங்குகண்ட தாய்ச் சொன்னாராகிற்
       கண்டதைச் சொல்லவில்லைக் காணி சூட்சந்தானே“
                                                (அத்வைத உண்மை போதம்-8)

போகர் கீழக்கரை அல் ஆரிஃபா செய்யிது ஆசியா உம்மா
      இராமநாதபுரம் மாவட்டத்தின் இயற்கைத் துறைமுகப்பட்டினமாகத் திகழ்வது கீழக்கரை பௌத்திர மாணிக்கப்பட்டிணம் எனப் பழந்தமிழ்க் கல்வெட்டுகள் வழங்கும் இப்பகுதியில் பிறந்தவர் கீழக்கரை ஆசியாம்மாள். தன்னை மிக எளிமையுடையவராகச் சிறியாள், பேதம் அறியாதவள், கல்லாள், சின்னவள் எனக் குறிப்பிடுவதைக் காணலாம்.  அப்பர் தேவாரத்தில் நாவுக்கரசர் தம்மை “நாயேன் அடியேன்“ எனக் குறிப்பதைப் போன்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார் இப்படி
      “என் பற்று உன்னில் அமைந்த விட்ட உயர்
       ஏக ஏகாந்தமும் நீயாவாய்
       துன்பத்தை நீக்கிச் சுகந்தருக எந்தன்
ஜோதியே இரத்தின ஞானப்பெண்ணே!
என்று வேண்டுவதைப் போன்று, போகரும் இறைவனை இப்படிப் போற்றுகின்றார்.
      அகண்ட பரிபூரணமா மையர் பாதம் போற்றி
       எடுத்து நின்றவுமை யவடாய் பாதம் போற்றி“
இறைவனைப் போற்றும் நெறியில் ஒன்றுபடுகிறார்கள்.


ஆய்வு முடிவுரை
1.   “சும்மா இரு“ எனும் இராமலிங்கரின் நெறியைப் போன்றே, இளையான்குடிப்புலவர் ஞானி முகமது மஸ்தான்.
     “சும்மா இருக்குஞ் சுகமே விதேக முத்தி“ என்கிறார்.
            மௌலானா ஐதுருஸ் “சும்மா இருக்க சுகம்“ எனப் பாடுகிறார் ஆக நல்ல செய்திகள் சமயம் கடந்தும் அதன் தனித்தன்மை கெடாமல் பரிமாறப் படுகின்றன.
2.   எந்த நாளில் சர ஓட்டம் எந்த மூக்கில் நிகழும் என்பதைத் திருமூலர் விளக்கியதுபோல் பீரப்பா விளக்கி உள்ளார். சூஃபி ஞானிகளும் உடல், மனநோய் நீக்கும் மருத்துவர்களாகத் திகழ்ந்துள்ளார்கள்.
3.   இரு சமயச் சித்தர்களும், சூஃபியாக்களும் தனக்கே உரிய தனித்துவமான மொழி நடையை,  யாப்பினைப் பின்பற்றி இருக்கிறார்கள்.
4.   சமயம் கடந்த குருசிஷ்ய உறவு கொண்டிருந்தார்கள், குறிப்பாக அவர்களிடம் மதபோதம், மனபேதம் இல்லை.  மொத்தத்தில் சித்தர்களும், சூஃபியாக்களும் அன்பிலே. அல்லாஹ்வை, எல்லாம் வல்லானைக் கண்டார்கள் என்பதே உண்மை எனப் புலனாகிறது.
பயன்பட்ட நூல்கள் :

1.
அஸ்ராருல் ஆலம்
-
மெய்ஞ்ஞானப் பேரமுதம் (1963)
2.
தக்கலை எம்.எஸ்.பஷீர்
-
ஞான இலக்கியங்கள் (1999)
3.
டாக்டர் அப்துல் ரகுமான் (தொ.)
-
குணங்குடியார் பாடற்கோவை (1980)
4.
பேரா. கா. முகம்மது பாருக் (ப.ஆ.)
-
மெய்ஞ்ஞானி பீர்முகம்மது அப்பா இலக்கிய ஆய்வுக் கோவை (1976)
5.
ஆர்.பி.எம்.கனி
-
பேரின்ப ரஸவாதம் (1958)
6.
ஏ.கே. ரிபாயி
-
தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு (1998)
7.
பேரா. கா. முகம்மது பாருக்
-
அல்குர் ஆன் அருள் உரைகள் (1999)
8.
பேரா. வை. சாத்தையா
-
இசுலாமிய இலக்கியத்தேன் (1999)
9.
ஆர்.பி.எம்.கனி
-
முஹியித்தீன் ஆண்டகை (1954)
10.
டாக்டர். இரா. மணிவாசகம்
-
நம் நாட்டுச் சித்தர்கள் (1960)
11.
Dr. Syed Waheed Ashraf
-
Sufism (1991)
12.
Arthur. J. Arberry
-
An Introduction to the History of Sufism 1992
13.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி வெள்ளி விழா மலர்
     
     
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரித் தமிழ்த்துறை நடத்திய சூஃபியிசக் கருத்தரங்கில் வழங்கிய  ஆய்வுக்கட்டுரை ஆய்வரங்கக் கோவை, பக்.12 19.


No comments:

Post a Comment